Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

பொது நிர்வாகம் மீதான கட்டுப்பாடுகள் - 4.3 out of 5 based on 4 votes
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 4.38 (4 Votes)

நிர்வாக அதிகாரிகளிடம் நிர்வாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்படுகின்ற போது அவர்கள் நிர்வாக பொறுப்புணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும். நிர்வாகிகள் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யாமல் தமது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும். அத்துடன் தமது கடமைகள், அதிகாரம் தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டும். எனவே நிர்வாகிகள் தமக்கு வழங்கப்படும் அதிகாரங்களையும், கடமைகளையும் துஸ்பிரயோகம் செய்யாமல் இருக்க நிர்வாகக் கட்டுப்பாடு விதிக்கப்படுகின்றது.

நிர்வாகக் கட்டுப்பாட்டின் வகைகள் :-

பொதுவாக நிர்வாகக் கட்டுப்பாடுகளை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று உட்கட்டுப்பாடுகள் மற்றயது வெளிக்கட்டுப்பாடுகள் ஆகும். உட்கட்டுப்பாடுகள் நிர்வாக இயந்திரத்துடன் இணைந்து செயற்படுகின்றது. வெளிக்கட்டுப்பாடு என்பது நிர்வாக இயந்திரத்திற்கு வெளியேயிருந்து செயற்படுவதாகும்.

1. உட்கட்டுப்பாடுகள் :-

பொது நிர்வாகவியல் ஓர் சுய ஒழுங்கினை தோற்றுவிக்கின்றது. நிர்வாக ஒழுங்கமைப்பு படிநிலை ஒழுங்கமைப்பாக உள்ளதால் ஒழுங்கமைப்பிலுள்ள ஒரு பகுதி அதனை மேற்பார்வை செய்யும் பிறிதொரு பகுதியால் இலகுவாக கட்டுப்படுத்தப்படுகின்றது. இச்செயற்பாட்டை விட நிர்வாகிகளிற்கான ஊதியக் குறைப்பு, பதவி இறக்கம், நீக்கம், எச்சரிக்கை போன்றவற்றின் மூலமும் கட்டுப்பாடுகள் நிகழ்கின்றன. ஆயினும் உட் கட்டுப்பாடுகள் பின்வரும் வழிகளில் நடைபெறுகின்றன.

வரவு செலவு அறிக்கை கட்டுப்பாடு:-

சட்ட சபையில் நிறைவேற்றப்படும் வரவு செலவுத் திட்டம் ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் நிர்வாகத்தினைக் கட்டுப்படுத்தும் உள் கட்டுப்பாட்டு வழிகளில் முதன்மையானதாகும். வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதன் நிதியாண்டு ஆரம்பமாகும். நிதியாண்டு ஆரம்பமாகியவுடன் அரசாங்கத்திற்கு வரவேண்டிய வரவுகளையும் அதேபோல அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பல்வேறுபட்ட தேவைகளிற்கான செலவீனங்களையும் மேற்கொள்ள தொடங்கும் இச்சந்தர்ப்பத்தில் நிதியமைச்சும் தணிக்கைத்துறையும் செலவீனங்களை மேற்கொள்ளும்.

ஆளணி முகாமைத்துவக் கட்டுப்பாடு:-

ஆளணி முகாமைத்துவம் ஊடாகவும் பொது நிர்வாகம் கட்டுப்பாட்டிற்குள்ளாகின்றது. படிநிலை ஒழுங்கமைப்பில் இக்கட்டுப்பாடு தன்னிச்சையாகவே ஏற்பட்டு விடுகின்றது. இங்கு இச்செயற்பாடு நிகழ்வதற்கு நிர்வாகக் கடமையுணர்வு ஏற்படுதல் வேண்டும். 1948 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கூவர் (ர்ழழஎநச) ஆணைக்குழு நிர்வாகத்துறைக்கு சமர்ப்பி;த்த அறிக்கையில் 'அதிகாரமற்ற கடமையும், பொறுப்பும் அர்த்தமற்றது. அதிகாரம் சீராக மேலிருந்து கீழ்நோக்கிப் படிப்படியாக வழங்கப்பட்டால்தான் மறுபக்கத்தில் கீழிருந்து மேல்நோக்கி கடமையும், பொறுப்பும் சிறப்பாக மேற்கொள்ளப்படும்'; எனக் கூறியிருந்தது.

செயற்திறன் மதிப்பீட்டு கட்டுப்பாடு

செயற்திறன் மதிப்பீட்;டுக் கட்டுப்பாட்டு முறை நிர்வாகக் கடமைகள் மீது உட்கட்டுப்பாட்டினை ஏற்படுத்தியிருக்கின்றது. வெளிக்கள அலுவலர்கள் வௌ;வேறுபட்ட திணைக்களங்களிற்குச் சென்று திணைக்களங்களிற்கென்று ஒதுக்கப்பட்ட விதிகளிற்கும், ஒழுங்கிற்கும் ஏற்ப செயற்படுகின்றனவா? என மேற்பார்வை செய்கின்றனர். சில நாடுகள் செயற்திறனை மதிப்பிடுவதற்கு விஞ்ஞான ரீதியான தரப்படுத்தலை மேற்கொள்கின்றன. ஆயினும் இது எல்லா நாடுகளிற்கும் பொருந்தும் ஒரு முறையுமல்ல அத்துடன் எல்லா வேலைகளிற்கும் இதை பயன்படுத்த முடியாது.

2. வெளிக்கட்டுப்பாடுகள்

வெளிக்கட்டுப்பாடு நிர்வாக இயந்திரத்திற்கு வெளியேயிருந்து மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடாகும். நிர்வாகப் பொறுப்பு அல்லது அதிகாரங்கள் ஒரு நாட்டின் அரசியல் யாப்பின் படி ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. சில நாடுகளில் அரசியல் யாப்பிற்கு பொதுநிர்வாகத்துறை பொறுப்புக் கூற வேண்டியதை விட அரசியல் கட்சிகளிற்கே அதிகம் பொறுப்பு கூற வேண்டியுள்ளது. இதனால் அரசியல் யாப்புக் கட்டுப்பாடு என்பதை விட கட்சிக் கட்டுப்பாடு அதிகமாக உள்ளது.

மக்கள் கட்டுப்பாடு :-

ஜனநாயக நாட்டில் மக்களே இறைமையாளர்களாவர். பொது மக்கள் கட்டுப்பாடு என்பது கூட நாட்டுக்கு நாடு வேறுபட்ட நிலையில்தான் மேற்கொள்ளப்படுகின்றது. நாட்டின் தலைவர், சில நாடுகளில் மக்கள் மூலம் நேரடியான தேர்தல் மூலமாகவும் சில நாடுகளில் மறைமுகமாகவும் தெரிவு செய்யப்படுகின்றார். சுவிற்சர்லாந்திலும், அமெரிக்காவின் சில மாநிலங்களிலும் நிர்வாக உத்தியோகத்தர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றார்கள். இந்நாடுகளில் மக்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை முறையாகச் செய்யாதுவிடின் இவர்களை மீளத் திருப்பியழைத்தும் விடுகின்றனர். இது மக்கள் கொள்கையுருவாக்க செயன்முறை, சட்டவாக்க செயன்முறை என்பவற்றில் நேரடியாக பங்குபற்றுதலை எடுத்துக் காட்டுவதாக அமையும்.

சட்டத்துறைக் கட்டுப்பாடு:-

நவீன ஜனநாயக நாடுகளில் மக்கள் தமது பொது நிர்வாகவியல் மீதான கட்டுப்பாடுகளை தமது பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்கின்றார்கள். மக்கள் பிரதிநிதிகள் சட்டத்துறையாகத் தங்களை மாற்றிக்கொள்கின்றனர். சட்டசபையே பொதுக் கொள்கை உருவாக்கம், நிர்வாக ஒழுங்கமைப்பு, நிர்வாக ஒழுங்கமைப்பிற்கான மொத்த மனிதவளம், வேலைத் திட்டங்களை என்ன வழிமுறைகளில் கையாண்டு பூர்த்தி செய்வது, பொதுக் கொள்கையினை நிறைவேற்ற வேண்டிய நிதியை எவ்வாறு பெறுவது போன்ற அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கின்றது. மேலும் சட்டத்துறை பின்வரும் வழிகளில் பொது நிர்வாகத்தினை கட்டுப்படுத்துகின்றது.

நிதி ஒதுக்கீடு மீதான கட்டுப்பாடு:-

பொது நிர்வாகத்துறை மீது சட்ட சபை கொண்டுள்ள கட்டுப்பாடுகளில் மிகவும் அதிகமானது நிதி ஒதுக்கீடுகள் மீதான கட்டுப்பாடாகும். நிர்வாகத்துறை தனது செலவீனங்களிற்கான மேலதிக நிதி ஒதுக்கீடுகளை சட்டசபையில் கோரும் போது சட்டசபை பொது நிர்வாகத்துறை கோரும் நிதி ஒதுக்கீட்டினை நிராகரிக்கலாம் அல்லது குறைத்து ஒதுக்கலாம். இவ்வாறான நேரங்களில் இடம்பெறும் கலந்துரையாடல்களும், விவாதங்களும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சனத்திற்கு உள்ளாக்குவதாகவே அமையும்.

கணக்குப் பரிசோதனை அறிக்கை:-

பாராளுமன்றத்தால் ஒப்புதலளிக்கப்பட்ட நிதிச் செலவீனங்கள் சரியான முறையில் செலவு செய்யப்படுகின்றதா என்பதை உத்தரவாதப்படுத்துவது சட்டத்துறையே ஆகும். இக்கட்டுப்பாடு பொதுச் செலவீனங்கள் மீது சட்டத்துறை ஏற்படுத்தும் கட்டுப்பாடாகும். இக்கடமைகள் கணக்கு பரிசோதனை அதிகாரியால் சட்டசபையின் பொதுக் கணக்கு குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் இவை தொடர்பான விவாதங்கள் நடைபெறும்.

விவாதங்களும் கலந்துரையாடல்களும் :-

பாராளுமன்றக் கூட்டத் தொடரின் போது அரசின் தலைவரால் நிகழ்த்தப்படும் தொடக்க உரையின் மீதும், வரவு செலவுத் திட்ட உரையின் மீதும், சட்டத்துறையில் புதிய சட்டம் இயற்றப்படும் போதும், சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் போதும் முழுமையான விவாதம் சட்டத்துறையில் நிகழ்கின்றது. இவ்விவாதங்கள் அரசாங்க கொள்கையினையும், திணைக்களங்களின்; கடமைகளினால் கிடைத்த வெற்றியினையும் முழுமையாகப் பரீட்சிப்பதாக இருக்கும்.

கேள்வி நேரம் :-

பொது நிர்வாகத்தின் மீதான சட்டத்துறைக் கட்டுப்பாட்டில் சட்டத்துறைப் பிரதிநிதிகளின் கேள்வி நேரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த நிகழ்வாகும். பாராளுமன்ற முறைமையுள்ள நாடுகளில் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் கேள்வி நேரம் என்பது ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்குழுவினரின் தவறான செயற்பாட்டை அமைச்சுக்கூடாக கேள்வி நேரம் கட்டுப்படுத்திக் கொள்கின்றது. இதனால் சட்டசபையில் கேள்வி நேரம் என்பது உண்மையான பொது நிர்வாகவியல் கட்டுப்பாடாக அமைந்து விடுகின்றது.

நிர்வாகத்துறைக் கட்டுப்பாடு :-

பொது நிர்வாகம் மீதான நிர்வாகத்துறைக் கட்டுப்பாடு என்பது பொது நிர்வாகம் மீதான தலைமை நிர்வாகத்தின் கட்டுப்பாடு என்றே பொருள் கொள்ளப்படுகின்றது.

Share

Who's Online

We have 232 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .